Search This Blog

Friday, September 15, 2006

பெண்ணே!நீயும் பெண்ணா?

மண் விட்டுப் பிரிந்த மலை- தாய் பிரிந்த சேய்,
நெஞ்சம் விட்ட நினைவு -நெருப்பை விட்ட அனல்,
வானம் விட்ட மேகம்- நட்சத்திரம் இல்லா இரவு,
துடுப்பு இல்ல படகு -பூக்கள் இல்லா செடி,
வாசம் இல்லா மலர்- பாசம் இல்லா பாலகன்,
நீர் இல்லா குளம்- கோயில் இல்லா ஊர்,
உயிர் இல்லா உடல்- புதிர் இல்லா வாழ்வு- என எவ்வளவோ பேசினாய், என்னை பிரிந்திருந்த கணங்களின் தவிப்பை கவிதையாய்!காதலித்த போது. என் நிழல் விழாத பகலும் நித்திரையாய் உணர்ந்தேன் என்றாயே?
மாற்றிக் கொண்டாயோ மணமான பின்னே மனதினை?
மங்களகரமாய் திரிகின்றாயே மலையாய் பேசிய நீ. மாறாக பேசிடாத நான் மட்டும் தாடியோடு. பெண்ணே! நானும்தான் மாறிவிட்டேன் இன்று.
ஆம் நானும் கவிதையாய் பேசுகின்றேன் பெண்ணே நீயும் பெண்ணா?

Wednesday, September 13, 2006

உன் எண்ணச் சிறகுகள்


களங்கிய குட்டையை ரசிக்க கற்றுத் தந்தவள்-நீ
மெளனமொழி கண்கள் பேசிட கற்றுத் தந்தவள்-நீ
விடியலை வரவேற்றிட கற்றுத் தந்தவள்-நீ
அன்பு எனும் சொல்லின் அடையாளம் காட்டியவள்-நீ
நொடியின் நீளம் கற்றுத் தந்தவள்-நீ
இடியின் இரைச்சலை இசையாக்கி காட்டியவள்-நீ
ஓடி ஒளியும் மின்னலின் இயலாமையை காட்டியவள்-நீ அன்று
அருகில் இருந்ததால் அனைத்தம் இனித்தன.இன்றோ
நீ அருகில் இல்லாததால் தொடர்ந்திடும் அலைகள்,
மலைகளின் குளுமை,வானவில்லின் வண்ணம்,
தென்றலின் தீண்டல் என எதுவுமே என்னைத்
தொடுவதில்லை. உன் எண்ணங்களைத் தவிர.

Tuesday, September 12, 2006

முன்னோர்கள்


காந்தியை காட்டி அகிம்சை வலியுறுத்தினர்.
புத்தன் காட்டி ஆசை கூடாது எனவும் வலியுறுத்தினர்.
ஏசுவை காட்டி அடித்த கைக்கு ஒத்தடம் வைக்க கற்பித்தனர்
பாரதியார் பாட்டு சொல்லி தமிழ் வலியுறுத்தினர். ஆனால்
காதல் கொண்டு கைப்பிடிக்க நினைக்கையில்
முட்டுக்கட்டையாய் முன்னோர்கள்.
காரணம் மதமும் இனமும் வேறாம்
மகான் வழி வந்த மக்கள்.

விடுதலை


திட்டிய தந்தையிடம் இருந்து,உழைக்கச் சொன்ன ஊர்மக்களிடம் இருந்துஉதறிய உறவிடம் இருந்து, விடுதலை என நினைத்து ஊர்விட்டு வெளிநாடுவந்ததும் தான் உணர்ந்தேன்.விடுதலை அல்ல .சிறை தண்டனை என்று.

புலம்பல்


வெளிநாட்டில் வேலை- டாலரில் சம்பளம்.
ஆண்டுக்கு மாதம் இரண்டு என விடுமுறை
கழிக்க தாயகம் திரும்பியவன் கண்கலங்கினான்.
மனிதனை மனிதன் சுமக்கும் கொடுமை என.
புலம்பியவன் அறிவானா? சுமையாளியின் புலம்பலை.
அயல்நாடுமுன்னேற அன்னை நாடு விட்டு, சென்று உழைத்திடும்உதவாக்கரை நீ என.

நானும் ஒரு அகதி


அன்பான அம்மா உண்டு, அறிவான அப்பாவும் உண்டு .
அடக்கமான அக்கா உண்டு,ஆதரவான அண்ணனும் உண்டு.
தங்கமான தங்கை உண்டு, தழுவிக்கொள்ள தம்பியும் உண்டு.
கண் போன்ற காதலி உண்டு, உரம் போன்ற உறவும் உண்டு .
வேலை இல்லாதபோது அருகில் இருந்த இவர்கள் யாரும், இதோ
இன்று வெளிநாட்டில் வேலை,அளவுக்கதிகமாய் சம்பாதிக்கையிலே
அருகில் யாரும்இன்றி நான் மட்டும் அகதியாய்.

Monday, September 11, 2006

வாக்காளனின் வாக்குறுதி


சிலநாள் கிடைத்த மதிய உணவால் நாயாய் நன்றி காட்டினான்.மறுதினங்களில் மாறிப்போனான் நாயாகவே!!.
எச்சில் இலைகளுக்கு நடுவில்
.நாக்கு மாறாமல் இன்னமும் கை காட்டுகிறான் இவன்
கைகட்டி வாக்கு தந்த தலைவனோ காரில் கண்டுகொள்ளாமல்.

அரசியல்வாதிகள்

ஆசைபட்டாலே அடைந்திடும் அதிர்ஷ்டசாலிகள் - அரசியல்வாதிகள்,
தனக்காவும் தன்மனைக்காவும் மக்களை மடியசெய்யும் சுயநலவாதிகள்,
மந்திரிகளாகி மதப்பிரச்சனையைத் தூண்டும் மந்திரவாதிகள்,
தலைமகன்என சொல்லி தலைபல வாங்கி மலையாய்
செல்வம் சேர்க்கும் கயவாளிகள்,
சமயம் பார்த்து சாதியை வைத்து சண்டை தூண்டும் சந்தர்ப்பவாதிகள்,
காலில் விழும்போதும்,கையெடுத்து வணங்கும் போதும்,
காலை வாரிவிடவும்-கையை வாங்கிடவும்,
வஞ்சம் செய்யும் நெஞ்சுண்ட கயவாளிகள்.
குற்றம் பலசெய்தாலும் சட்டங்கள் பல வந்தாலும்
செளகர்யம் குறையாமல் சதுரங்கம்ஆடும் அகப்படாத ஆயுள்கைதிகள்.
அறிக்கைகள் பல அறிவித்து ஆசைதனைதூண்டிவித்து
துன்பப்படுவோரின் வயிற்றில் அடிக்கும்ஆக்கிரமஜாதியினர்.
தினந்தோறும் பூச்சு இன்றி புன்முறுவலோடு பலபல வேடம்
போடும் பெரும் நாடக கூட்டத்தினர்கள். இதை அறிந்தும்
மனம் வருந்தியும் மனம்மாறி குமுறுதல் மனித இயல்பு.அந்த மனதை மாற்றிடல் சாத்தியமானது எப்படி என்பதை அறிந்த அராஜகவாதிகள்.
சலவைநோட்டுக்களால் சண்டைக்காரனையும் சாட்சிகாரனாக்கிடும்
சாதூர்யவாதிகள்.இவனின் சுயரூபம் கண்டும் தெரிந்தும்-
தேர்தலுக்கு முன் கிடைக்கும் சில மதிய உணவுடன் கூடிய, மாமிசதுண்டுகளுக்கு நன்றி மறக்காத மனிதமனம் தான்அவர்களின் மந்திரக்கோலோ?இல்லை அவன் ஆட்சி செய்யும் அமைச்சரவையோ?அவனையே அழைக்கின்றனறே அதிக ஓட்டுக்கள் இட்டு.இப்படியும் ஒரு வித்தியாசமானவிந்தையா!! இல்லையில்லை .இதுதான் இன்றைய இந்தியா.

காற்றும் - கனவும்


சிறகில்லா பறவைகளா? காற்றும் கனவும்
இவைகள் கட்டுபாடின்றி செல்கின்றனவே.
பண வலுவில்லாதவனை கனவும்,
மன வலுவில்லாதவனை காற்றும்,
வின்னில் பறக்க வைக்கும் விந்தைகள் ஏனோ?
இவற்றை வெறுத்தோர் வெளிநாட்டிலும் இல்லையாமே!
இவைகளை பார்த்தவர்கள் பாரினிலேது-
இவைகளை உணராதவர்கள் உலகினிலேது.
காதலுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் எவ்வளவோ?
அளவில் அடங்கவில்லையே.
நீங்கள் கொண்டு வந்த வரம்தான் என்னவோ?
காதலை வாழவைக்கவா?இல்லை இக்கவியை வரவழைக்கவா?
காதலித்து பிரிந்தோரா? இல்லை இறைவனுக்கு
பிறந்த இரட்டைகுழந்தைகளா?உண்மையில்
உங்களின்உறவு தான் என்ன? கனவே!நீயே
இதற்கும் பதில் சொல்லிடு.உன் வரவுக்காக உறக்கத்தில் விழித்திருக்கிறேன்.கேள்வியோடு

காதலும்- கஞ்சாவும்



காதலின் பலம் மட்டுமல்ல கஞ்சாவின் பலமும் பணம் வைத்திருப்பவனாலும் அழிக்க முடியாது.
காதல் மட்டுமல்ல கஞ்சாவும் உன்னை உலகம் மறக்கச் செய்யும்
காதலி உடன் இருந்தால் உறக்கம் உழைப்பு தேடாதது போல
கஞ்சா உடன் இருந்தாலும் எதுவும் தேடாது.
காதலிக்காக காத்திருக்கும் கணங்கள் போல
நரகமாய் நகரும் கஞ்சா இல்லாத கணங்கள்.
காதலியா?காசா? என்றால் காதலி வேண்டுவதுபோல
கஞ்சாவா? காசா? என்றால் கஞ்சா தான் கேட்கும்.
காதலியின் நினைவென்னும் சிறகு கொண்டு பறப்பதுபோல
போதை என்னும் சிறகு கொண்டு பறக்கலாம் பார் தாண்டி.
காதலி சொன்னதை அடையத்தூண்டும் காதல் போல
மனம் சொல்வதை அடையத்தூண்டும் கடைசி வரை.
காதல் கொண்ட நேரம் சொர்க்கத்தில் சுற்றித்திரிவாய்
கஞ்சா கொண்ட நேரம் சொர்க்கத்தை சொந்தமாக்கியிருப்பாய்.ஆக
காதல் வேறல்ல கஞ்சா வேறல்ல.
காதல் புனிதமெனில் கஞ்சாவும் புனிதமே.
காதலில் தோல்வி உண்டு.காதலி கடைசி வரை
வராமல் போனாலும்போகக்கூடும்.ஆனால்
கஞ்சா நீயே ஒதுக்கினாலும் உன்னை ஒதுக்கிடாது
தொடரும் கடைசி வரை.
காதலி விட்டுச் சென்ற நினைவுபோல.

Sunday, September 10, 2006

காதல் கல்லூரி


ஷாஜகான் இல்லையடி இன்று
இருந்திருந்தால்!!!
நம்மிடம் காதல் பாடம் கற்றுக் கொள்ள
காத்திருந்திருப்பான் தினமும்
கதிரவனைப் போல.

வதந்தியாய் வந்த காதல்


குளித்திட குளக்கரை நோக்கி செல்லையிலே- அவளும் அங்கே
குளித்திட, குளித்தவர்கள் இணைத்து பேசிட,
பேருந்துக்காக காத்திருக்கையிலே- அவளும் ஏறிட
பயணிகளும் இணைத்து பேசிட,
மதிய உணவு மறந்த தினம் மனிதாபிமானமாய் உணவு தந்திட,
உடன் உன்டோர் இணைத்து பேசிட,
மழைக்காக ஒதுங்கி நின்றிருக்கையிலே- குடை பிடித்து
சென்றோரும் இணைத்து பேசிட,
குலதெய்வம் என குடும்பத்தோடு அவள் சென்றிட குலத்தொழிலாய்கொண்டநான் குங்குமம் கொடுத்திட,
கண்ட காற்றும் சற்று இரைந்து வீசியபோது உணர்ந்தோம்
மரங்களும் இணைத்து பேசுவதாய் மனிதர்களோடு. இணைத்து
பேசியதால் இணைந்து போன இதயங்கள் .இணைந்து வாழ
விரும்பிய போது யாருமே வரவில்லை.
வாழ்த்திடவும் வரவேற்றிடவும்.ஆனால் வதந்தி மட்டும்
வந்த வண்ணமாய் மற்ற ஜோடியை சேர்த்து பேசியபடி.ஊர்
வதந்தியால் வந்த காதல் எங்களை ஊமையாய் ஆக்கி போனது.